Friday, November 22, 2013

இன்றோடு ஓராண்டாகிறது..

இன்றோடு ஓராண்டாகிறது.. புதிய தலைமுறையில் சேர்ந்து...
பள்ளியிலும்... கல்லூரியிலும் அறிவியலை தேர்வு செய்து படித்த எனக்கு அப்போதெல்லாம் தெரியாது நான் முழு நேர ஊடகவியலாளனாக மாறுவேன் என்று.... எனது வாழ்வை வடிவமைத்ததில் எனது அப்பாவின் பங்கு அதிகம்... நாளிதழ், வார இதழ்களை வீட்டிற்கு வாங்கி வந்து பாடப் புத்தகங்களோடு அவற்றையும் வாசிக்க தூண்டியவர்..



நான் எட்டாவது படிக்கும் போது எனது கிராமத்தில் பாதியில் விட்டுபோன சாலை பணிகளை பற்றி " ஓட்டை டவுசருக்கு ஒட்டு " என்ற தலைப்பில் ஒரு செய்தியாக (?!) எழுதி தினமலர் நாளிதழுக்கு அனுப்பினேன்... அது இரண்டு தினங்களில் பிரசுரமும் ஆனது.. அப்போது எங்கள் கிராமத்தில் "கிராம உதவியாளராக" (வருவாய் துறை ) வேலை செய்துவந்த எனது அப்பாவிடம் ஊராட்சி மன்ற தலைவர் "கோர்த்து" விட அன்று எனக்கு சரியான "கச்சேரி " .

அன்று வாங்கிய அடி வலித்தாலும் பத்தாவது படிக்கும் போது சிறுவர்மலரில் எனது சிறுகதைகள் பிரசுரமாக அதுவே அடித்தளமாக அமைந்தது.. ஆனால் அப்போது வரை நான் என்னாவாகப் போகிறேன் என்ற கேள்விக்கு விடை தெரியாமலிருக்க "விண்வெளி அறிவியல் " தான் இனி என் வாழ்க்கை என்று முடிவெடுத்து, கல்லூரியில் இயற்பியல் பாடத்தை தேர்வு செய்து படித்தேன்.

அதற்கும் காரணம் எனது அப்பா.. எனக்கு நன்றாக நினைவிருக்கிறது எனக்கு 5 வயதிருக்கலாம்...மின்சார வசதியில்லாத ஓட்டு வீடு... கயிற்று கட்டிலில் என் அப்பாவுடன் வானத்தை பார்த்து படுத்திருக்கும் போது அவர் சொன்ன நட்சத்திர கதைகளும்.. நிலா ஏன் பூமியை சுற்றுகிறது என்று அவர் சொன்ன விளக்கமும்தான்....


எந்த பொருளாதார பின்னணியும் இல்லாத சூழலில் என்னையும் எனது அண்ணனையும். படிக்க வைத்த அவருக்கு பாரமாக இருக்க வேண்டாம் என்று 2006 இல் திண்டுக்கல்லில் இயங்கிவந்த உள்ளூர் தொலைக்காட்சியில் வேலைக்கு சேர்ந்தேன்... அன்று தொடங்கிய இந்த ஊடகப்பயணத்தின் ஒரு பகுதியாக இன்று புதிய தலைமுறையில் செய்தியாளராக வேலை செய்து வருகிறேன்.. இங்கு வந்தபிறகு நான் எட்டிய மகிழ்சிகரமான நாட்கள் நிறைய.. குறிப்பாக ஶ்ரீஹரிகோட்டா இந்திய விண்வெளி ஆய்வு மைய பயணம்... இயற்பியல் படித்த நான் ஒரு விஞ்ஞானியாக (? :P) உள்ளே செல்ல நினைத்து ஒரு செய்தியாளனாக சென்றது... பலகட்ட பாதுகாப்பு அமைப்பு கொண்ட ராக்கெட் ஏவுதளம், ராக்கெட் மற்றும் செயற்கைக்கோள் கட்டுப்பாட்டு அறை ஆகிய இடங்களுக்குச் சென்றது.. இதுவரை 5 முறை அங்கு சென்றுவிட்டேன்.... பிறவிப்பயனையே அடைந்தவிட்டதைப் போன்ற மகிழ்ச்சி.. அதை என்னால் எழுத்துக்களால் விளக்க முடியவில்லை. அதேபோல், குழந்தைகளுக்கான தடுப்பு மருந்து ஒன்று காலாவதியாகியும் விற்பனையானதை அம்பலப்படுத்தியதை அடுத்து நாடு முழுவதும் அந்த மருந்திற்கு இடைக்கால தடைவிதித்தது மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையம். இவையெல்லாம் எனக்கு மனதில் ஆழமான திருப்தியை ஒரு பக்கம் கொடுத்தாலும் எட்ட வேண்டிய தூரம் இன்னும் இருப்பதை சுட்டிக்காட்டுகிறது எனது பேனா...


என் வளர்ச்சிக்கு அடித்தளமிட்ட என் பெற்றோர் ,குருநாதர் "தினமலர் " ஹரிஹரன், மற்றும் என் வாழ்வோடு பிணைந்த அனைத்து தோழமைகளுக்கும்.. ஊடக நண்பர்களுக்கும்.. நன்றி...
எனது கனவுகளின் பயணம் தொடரும்....

Thursday, September 19, 2013

மரித்துப் போன மனிதநேயம்....



பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த சில தினங்களாக பார்வையற்ற பட்டதாரிகள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்... இதில்
பகுத்தறிவை அனைவரது நெஞ்சிலும் விதைத்த பெரியாரின் பிறந்தநாளான கடந்த 17 ஆம் தேதி, நடந்த நிகழ்வு மனித நேயம் என்ற ஒன்று இன்னும் இருக்கிறதா என்ற கேள்வியை என்னுள் எழுப்பிக் கொண்டிருக்கிறது... 

போராட்டத்தில் கைது செய்யப்பட்டால் பொதுவாக மண்டபங்களில் தங்க வைப்பது வழக்கம், விடுவிக்கப்படுவது அருகில் உள்ள பேருந்து நிலையங்களில் விடுவிக்கப்படுவர், ஆனால் முதல் நாள் கைது செய்யப்பட்டவர்களை காவல்துறை விடுவித்த இடம், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு சுடுகாட்டில்.. படுக்க வைத்த இடம் தகன மேடை.... 

இது ஒரு பக்கம் இருக்கும் போது, இரண்டாவது நாள் ஈ.வே.ரா சாலையில் பார்வையற்ற பட்டதாரிகள் மறியலில் ஈடுபட முயன்றனர் என்பதற்காக 200 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு இருவேறு முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அவற்றில் புதுப்பேட்டை சமூக நலக்கூடத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தவர்கள் அனுபவித்தது மிகக் கொடுமை. காலை 10 மணிக்கு கைது செய்யப்பட்டு இரவு 10.30 வரை அடைக்கப்பட்டிருந்தவர்களுக்கு மதிய உணவும் கொடுக்கவில்லை.. இரவு உணவும் கொடுக்கவில்லை.. இதற்கும் மேலாக, விடுதலையானவர்களை அருகிலுள்ள பேருந்து நிலையம் அல்லது, ரயில்வே நிலையத்திற்கு கொண்டு சென்று இறக்கிவிட எந்த ஒரு வாகன வசதியும் செய்யாததால், பேருந்திற்காக அந்த கும்மிருட்டில், பார்வையற்றவர்கள் தெருத்தெருவாக அலைந்தது.."மனித நேயம்" என்ற ஒன்று இன்னும் இருக்கிறதா என்ற கேள்வியை என்னுள் எழுப்பிக் கொண்டிருக்கிறது... 



இது தொடர்பாக செய்தியாளன் என்ற போர்வை எனக்கு இருந்தாலும், சாதாரண மனிதனாக காவல் துணை ஆய்வாளரிடம் கேட்டதற்கு, அவர்களின் பதில், " அது எங்க டிவிஷன் கிடையாது சார்.. நான் இப்பதான் வந்தேன் " என்று கூறிக்கொண்டே, டீ கடைக்காரரிடம், "தம்பி டீ இன்னும் வரல" என்று நழுவிக்கொண்டார். இதற்கும் மேலான ஒரு கொடுமை.. அந்த முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த இரண்டு சகோதரிகளிடம் தகாத முறையில் நடக்கவு முயற்சித்துள்ளதோடு, ஷூ போட்ட காலால் உதைத்துள்ளனர்.. காவல்துறையினருக்கு இவர்கள் மேல் என்ன பகை ? இவர்களும் இந்நாட்டு குடிமகன்கள்தானே.. இவர்களுக்கான உரிமைகளை கேட்கக்கூட உரிமை இல்லையா..?

-கிறுக்கன்...

Sunday, June 2, 2013

நினைவுகள்...


சொட்டுச்சொட்டாய் 
தூரும் வானம்....

தூரத்தில் நீ...

எட்டிப்பிடிக்க எனக்கும் ஆசைதான்.. 

முந்தி நிற்கும் உன் கோபத்தின் முன்பு ???

இருந்தாலும் வாரியணைத்தது.. 
என் நெஞ்சம்... 
வந்து நின்ற
உன் காதல் ததும்பும் நினைவுகளை....

-கிறுக்கன்...

Saturday, April 20, 2013

ஒரு செய்தியாளனாக என்னை உணர்ந்த நொடி.....


சென்னை ஐ.ஐ.டி.யில் ஆண்டு தோறும் சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு விருதுகள் வழங்கி கெளரவிப்பது வழக்கம். அதில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விகளின் எண்ணிக்கை, வருகைப் பதிவு, பங்கேற்ற விவாதங்கள் ஆகிவற்றை அடிப்படையாகக் கொண்டு அந்த விருது பெறுபவர்கள் தேர்வு செய்யப்படுவர்.  

அதேபோல் இந்த ஆண்டிற்கான சிறந்த நாடாளுமன்ற உறுப்பினராக தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.இராமசுப்பு உட்பட 4 பேர் தேர்வு செய்யப்பட்டிருந்தனர்.இதனிடையே பார்வையாளர்களின் கேள்வி நேரம் வரும் போது அனைவரும் நாடாளுமன்றத்தில் நடந்தவை பற்றி கேள்வி எழுப்பிக் கொண்டிருந்தனர், அப்போது எழுந்த நான் " எனது பெயர் பாரதி, புதிய தலைமுறைத் தொலைக்காட்சியின் செய்தியாளன், இந்த கேள்வியை ஒரு செய்தியாளனாக கேட்கவில்லை... சக மனிதனாக கேட்கிறேன்.. அதை இராமசுப்புவிடம் கேட்க விரும்புவதாக சொல்லிவிட்டு இப்படி கேட்டேன்....

"கடந்த சில வருடங்களாக தமிழக மீனவர்கள் கிட்டத்தட்ட 600 க்கும் மேற்பட்டோர் இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்டுள்ளனர். இவை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இப்படியிருக்கும் போது இதுவரை ஏன் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.... உங்களுடைய நிலைப்பாடு என்ன" என கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கும் போதே நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அலறியடித்துக் கொண்டு மேடைக்குச் சென்று இது போன்ற கேள்விகளை இங்கு கேட்க கூடாது என்றனர். அதற்கு நான் சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் என்றால் மக்கள் பிரச்சினைக்கு தீர்வு காண முயன்றவராகவும், தீர்வு கண்டவராகவும் இருக்க வேண்டும் இங்கு யார் அப்படி செய்து கொண்டிருக்கின்றனர்... நான் கேள்வி எழுப்ப வேண்டிய இடத்தில் இருக்கிறேன்..அவர் பதில் கூற வேண்டிய இடத்தில் இருக்கிறார் என்றேன். 

இதனை சற்றும் எதிர்பார்க்காத நாடாளுமன்ற உறுப்பினர் திரு.இராமசுப்பு என்ன பதில் சொல்வதென தெரியாமல் திரு திருவென விழித்தார். (ஏனென்றால் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவரான அவரது மாவட்டத்தில் 18 கிராமங்கள் மீனவ கிராமங்கள் ) இதற்கு என்னை வாழ்த்தும் விதமாக அங்கிருந்த IIT மாணவர்கள் கை தட்டி பாராட்டினர். இதனையடுத்து அலுவலகத்திலிருந்து எனக்கு தொலைபேசியில் அழைப்பு வரவும் வெளியே வந்துவிட்டேன்... 

இந்த நிகழ்ச்சி முடிந்ததை அடுத்து அனைவரும் எனக்கு கை கொடுத்துக் கொண்டிருக்கும் போது என்னை கடந்து சென்ற அந்த நாடாளுமன்ற உறுப்பினர் என்னை கட்டியணைத்து " நல்லா கேள்வி கேட்டீங்க தம்பி...." என்று சொல்லிவிட்டு எனது மற்ற கேள்விகளுக்கு பதில் அளித்துவிட்டுச் சென்றார்.... இந்த நிகழ்வின் போது அங்கிருந்த எங்கள் திட்டமிடல் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் (Assignment Head) திரு.பிரேம் சங்கர் என்னிடம் " என்ன பாரதி.. கேட்டீங்க..எல்லாரும் உங்களுக்கு  கை கொடுக்குறாங்க... " என்று கேட்டார்..... 

இந்த நொடி ஒரு செய்தியாளனாக கர்வம் கொள்ள வைத்தது.... எனக்கும் சமூக பொறுப்பு உண்டு என்பதை மீண்டும் உணர்த்தியது..... இந்த வாய்ப்பினை வழங்கிய எங்களது செய்தித் தலைமை திரு.ஸ்ரீனிவாசன், தலைமைச் செய்தியாளர் பீர் முகமதுவுக்கு நன்றி....

-கிறுக்கன்...