பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த சில தினங்களாக பார்வையற்ற பட்டதாரிகள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்... இதில்
பகுத்தறிவை அனைவரது நெஞ்சிலும் விதைத்த பெரியாரின் பிறந்தநாளான கடந்த 17 ஆம் தேதி, நடந்த நிகழ்வு மனித நேயம் என்ற ஒன்று இன்னும் இருக்கிறதா என்ற கேள்வியை என்னுள் எழுப்பிக் கொண்டிருக்கிறது...
போராட்டத்தில் கைது செய்யப்பட்டால் பொதுவாக மண்டபங்களில் தங்க வைப்பது வழக்கம், விடுவிக்கப்படுவது அருகில் உள்ள பேருந்து நிலையங்களில் விடுவிக்கப்படுவர், ஆனால் முதல் நாள் கைது செய்யப்பட்டவர்களை காவல்துறை விடுவித்த இடம், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு சுடுகாட்டில்.. படுக்க வைத்த இடம் தகன மேடை....
இது ஒரு பக்கம் இருக்கும் போது, இரண்டாவது நாள் ஈ.வே.ரா சாலையில் பார்வையற்ற பட்டதாரிகள் மறியலில் ஈடுபட முயன்றனர் என்பதற்காக 200 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு இருவேறு முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அவற்றில் புதுப்பேட்டை சமூக நலக்கூடத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தவர்கள் அனுபவித்தது மிகக் கொடுமை. காலை 10 மணிக்கு கைது செய்யப்பட்டு இரவு 10.30 வரை அடைக்கப்பட்டிருந்தவர்களுக்கு மதிய உணவும் கொடுக்கவில்லை.. இரவு உணவும் கொடுக்கவில்லை.. இதற்கும் மேலாக, விடுதலையானவர்களை அருகிலுள்ள பேருந்து நிலையம் அல்லது, ரயில்வே நிலையத்திற்கு கொண்டு சென்று இறக்கிவிட எந்த ஒரு வாகன வசதியும் செய்யாததால், பேருந்திற்காக அந்த கும்மிருட்டில், பார்வையற்றவர்கள் தெருத்தெருவாக அலைந்தது.."மனித நேயம்" என்ற ஒன்று இன்னும் இருக்கிறதா என்ற கேள்வியை என்னுள் எழுப்பிக் கொண்டிருக்கிறது...
இது தொடர்பாக செய்தியாளன் என்ற போர்வை எனக்கு இருந்தாலும், சாதாரண மனிதனாக காவல் துணை ஆய்வாளரிடம் கேட்டதற்கு, அவர்களின் பதில், " அது எங்க டிவிஷன் கிடையாது சார்.. நான் இப்பதான் வந்தேன் " என்று கூறிக்கொண்டே, டீ கடைக்காரரிடம், "தம்பி டீ இன்னும் வரல" என்று நழுவிக்கொண்டார். இதற்கும் மேலான ஒரு கொடுமை.. அந்த முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த இரண்டு சகோதரிகளிடம் தகாத முறையில் நடக்கவு முயற்சித்துள்ளதோடு, ஷூ போட்ட காலால் உதைத்துள்ளனர்.. காவல்துறையினருக்கு இவர்கள் மேல் என்ன பகை ? இவர்களும் இந்நாட்டு குடிமகன்கள்தானே.. இவர்களுக்கான உரிமைகளை கேட்கக்கூட உரிமை இல்லையா..?
-கிறுக்கன்...

No comments:
Post a Comment